மதீனாவில் நபி (ஸல்) யுடன் இருக்கும் போது
பல அனுபவங்கள் உமர் (ரலி)க்கு
ஏற்பட்டது.
யூதர்கள்:-
மதீனாவில் கனிசமான அளவு
யூதர்கள் வாழ்ந்து வந்தார்கள். முஸ்லீம்களுக்கும், யூதர்களுக்கும் உடன்படிக்கை எழுதப்பட்டு அதன்படி, யூதர்களுக்கு முழு
சமய சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. உமர் (ரலி) அவர்கள் அடிப்படையிலேயே வணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் யூதர்களிடையே நல்ல
தொடர்பு இருந்தது. இதுபோக உமர் (ரலி) அவர்களுக்கு யூதர்களுடைய மொழியான ஹிப்ரு மொழியும் தெரிந்திருந்ததால், அவர்களுடன் அம்மொழியிலேயே உரையாடுவார்கள்.
இது தவிர, யூதர்களுடைய வேதமான தோராவில் நபி (ஸல்)-யைப்
பற்றி அதிகமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், யூதர்கள் தங்களுடைய பொறாமையின் காரணத்தால், இஸ்லாத்தை ஏற்காமல் இருந்து வந்தனர். இதற்கிடையே தோராவின் பிரதி ஒன்று உமர் (ரலி)க்கு
கிடைக்க, அதை நபி (ஸல்)யிடம் வந்து காண்பிக்க உமர்
முன்வந்தார்கள்.
ஆனால், அதை வாங்க மறுத்து நபி (ஸல்) அவர்கள் “இறைவன் மீது
ஆணையாக, இறைத்தூதர் மூஸா (அலை) என் சமூகத்தில் தோன்றியிருந்தாலும் அவரும் எனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற குர்ஆனையே பின்பற்ற வேண்டும் என்று கூறி
உமரை (ரலி) கடிந்து கொண்டார்கள்.
பின் உமர் (ரலி) அவர்கள், யூதர்களிடம் சென்று, “இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) பற்றி தோராவில் ஏதேனும் வசனங்கள் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள் நிறைய வசனங்கள் இருப்பதாக பதிலளித்தார்கள்.
பின் ஏன்
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) பின்பற்ற மறுக்கிறீர்கள்? என்று உமர் (ரலி) கேட்க.
யூதர்களோ முஹம்மது (ஸல்) நபிக்கு இறைவனுடைய வார்த்தைகள் வானவர் ஜிப்ரயீல் மூலம் வருகிறது, அந்த
ஜிப்ரயீல் எங்களுக்கு எதிரி ஆதலால்தான் என்றார்கள்.
இதை உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) யிடமும் தெரிவிக்க, இந்த
சம்பவம் நடந்து சில நாட்களிலேயே அல்லாஹ், “யார்
ஜிப்ரயீலுக்கு பகைவனோ, அவர் அல்லாஹ்வுக்கும் பகைவரே” என
வசனத்தை இறக்கியருளினான்.
இந்த வசனம் இறங்கியவுடனே, உமர் (ரலி) அவர்கள் யூதர்களுடன் தனக்கிருந்த அத்தனை தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார்கள்.
இதற்கிடையே யூதர்கள் தங்கள் ஒப்பந்தங்களை மீறுவதும், ஏற்பதுமாக இருந்தார்கள். இதைப்பற்றி தோழர்களிடம் நபி (ஸல்) கேட்க, உமர் (ரலி) யூதர்களை மதீனாவை விட்டு வெளியேற்றி விடலாம் எனக்
கூறினார்கள்.
அதே நேரத்தில் யூதர்கள் நிறைய பிரச்சனைகளை உருவாக்கவே, உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்) நியமித்து யூதர்களை மதீனாவை விட்டு வெளியேற உத்தரவிட்டார்கள். அதன்படியே, யூதர்கள் மதீனாவை விட்டு வெளியேற்றப்பட அவர்கள் கைபருக்கும் சிரியாவுக்கும் சென்றடைந்தார்கள்.
நயவஞ்சகன் அப்துல்லாஹ் பின் உபைய்:-
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வரும் போது, அப்துல்லாஹ் பின்
உபைய், மதீனத்து அன்சாரிகளின் தலைவனாக இருந்தான். அவனுடைய எண்ணம் மதீனாவின் நிரந்தர தலைவனாக இருப்பது. ஆனால், நபி (ஸல்) வந்ததும், அன்ஸார்கள் இஸ்லாத்தை ஏற்று நபி
முஹம்மது (ஸல்) தலைமையின் கீழ்வர ஆர்வம் காட்டினர். அப்போது வேறு
வழியில்லாமல் இவனும் இஸ்லாத்தை தழுவுவதாக காட்டிக் கொண்டான்.
அதோடில்லாமல் உஹத்
போரில் தன்னுடைய ஆட்களை திரும்பப்பெற்றது, ஹிஜ்ரத் செய்து வந்தவர்களின் மேல்
குற்றம் சுமத்துவது, அதுபோக அன்னை ஆயிஷா (ரலி)-யின்
மேல் பொய்குற்றம் சுமத்தியதில் முக்கியப்பங்கு என இவன் மீது
ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தும் இவன் மேல்
எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நபி (ஸல்) விட்டு வைத்திருந்தார்கள். ஒரு
முறை உமர் (ரலி) அவர்கள் இவனைக் கொல்ல அனுமதி கேட்க, நபி (ஸல்) அவர்களோ வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள்.
அப்துல்லாஹ் பின்
உபைய் இறந்தபோது, தொழுகை நடத்த நபி (ஸல்) அவர்கள் ஆயத்தமானார்கள். ஆனால், உமர் (ரலி) கொஞ்சம் தள்ளியே நின்றிருந்தார்கள். நபி (ஸல்) அவனுக்காக தொழுவதை தடுத்தார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்களோ உமரை (ரலி) அருகில் வந்து தொழுகையில் ஈடுபடுமாறு கூறி
தொழுகையையும் நடத்தினார்கள். இன்னும் அப்துல்லாஹ் பின்
உபைய் அடக்கப்படும் வரை அங்கேயே நின்றுவிட்டு பின்
கிளம்பினார்கள்.
சில நாட்களில் அல்லாஹ் வசனத்தை இறக்கியருளினான்.
“அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒரு போதும் அவருக்காக மரணத் தொழுகை தொழாதீர்.
மேலும் அவருக்காகப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கஸ்தலத்தில் நிற்காதீர் (9:84)
ஹப்ஸா (ரலி):-
மதீனாவில் ஒரு
முறை நபி (ஸல்) அவர்கள், தன்னுடைய மனைவியரை விவாகரத்து செய்துவிட்டார்கள் என்ற
செய்தி பேசப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்)யைப்
பார்த்து விசாரிக்க விரைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ஓர்
அறையை ஒதுக்கி உள்ளே அமர்ந்திருந்தார்கள். உமர் (ரலி) அங்கே வந்து வெளியில் நின்றிருக்கும் பணியாளிடம் நபியை (ஸல்) சந்திக்க அனுமதி கேட்டார்கள். இதை
நபி (ஸல்) யிடம் தெரிவிக்க நபியோ அமைதியாக இருந்துவிட்டார்கள். பின்
நீண்ட நேரம் உமர் (ரலி) அவர்கள் வெளியிலேயே அமர்ந்த வண்ணம் இருந்தார்கள்.
பின் இரண்டாவது முறையாக அனுமதி கேட்க,
இந்த முறையும் நபி (ஸல்) அமைதியாகவே இருந்துவிட்டார்கள்.
அடுத்தும் காத்திருந்து மூன்றாவது முறையாக அனுமதி கேட்க, நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை உள்ளே வரச்
சொன்னார்கள்.
உமர் (ரலி) நபியைச் சந்தித்தார்கள்.
உமரே! என்ன விஷயம்.
“நபியே! நான்
இங்கு ஹப்ஸாவுக்காக வாதாடவில்லை. நீங்கள் அனுமதித்தால் ஹப்ஸாவின் கழுத்தை நெறிக்க நான்
தயாராக இருக்கிறேன்” என்றார்கள் உமர் (ரலி).
உமர் (ரலி) தொடர்ந்தார்கள், “நபியே! ஒருவேளை, நீங்கள், உங்கள் மனைவியரை விவாகரத்து செய்திருந்தால், நிச்சயமாக உங்களுடன் அல்லாஹ்வும், வானவர்களும், மற்றும் உங்களைப் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்” என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உமரைப் (ரலி) பார்த்து மெல்ல புன்னகை செய்தார்கள்.
“உமரே! நான்
எந்த மனைவியையும் விவாகரத்து செய்யவில்லை. மாறாக அவர்களை விட்டு ஒரு
மாதம் விலகி இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்” என்றார்கள்.
அப்படியானால் நபியே! இதை
நான் ஹப்ஸாவிடம் தெரிவிக்கலாமா?
“நீங்கள் விரும்பினால்” நபி (ஸல்) பதிலளித்தார்கள்.
Comments
Post a Comment